Find us on Google+ இணையத் தமிழன்: நான் ரசித்து படித்த ஆங்கில நூல்கள்/நாவல்கள்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Friday, May 11, 2012

நான் ரசித்து படித்த ஆங்கில நூல்கள்/நாவல்கள்


ங்கில நாவல்களுடனான என்னுடைய அறிமுகம் பள்ளியிளிருந்தே ஆரம்பித்துவிட்டது. என்னதான் ஆங்கிலம் எனக்கு திண்டாட்டம் என்றாலும் ,ஆங்கிலம் இரண்டாம் தாளில் வரும் Non-Detail எனப்படும் கதை / கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் பின்னர் பல ஆங்கில நாவல்களை படிக்கத் தொடங்கினேன். நான் மிகவும் ரசித்த சில நாவல்களை இங்கு வரிசைப் படுத்துகின்றேன்.

ஆலிவர் ட்விஸ்ட் (OliverTwist)  : 

நான் படித்து பிரமித்த முதல் ஆங்கில நாவல் , சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) அவர்கள் எழுதிய "ஆலிவர் ட்விஸ்ட்" எனும் புகழ்பெற்ற நாவலாகும். இந்நாவல் பின்னர் ஹாலிவுட் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு,பல ஆஸ்கர் விருதுகளை பெற்றது.தமிழில் கூட "அநாதை ஆனந்தன் " என்ற திரைப்படம் , இந்த நாவலை தழுவி படமாக்கப்பட்டது தான்.
அனாதையான ஆலிவர் எனும் சிறுவன் , கொள்ளையர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டு, பற்பல போராட்டங்களுக்கு பிறகு நல்லவர்கள் கையில் சேரும் கதை. மிக உருக்கமாகவும், சுவாரசியமாகவும் பின்னப்பட்ட அருமையான நாவல் இது.

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் (Sherlock Holmes):

எழுத்தாளரும், இயற்பியலருமான சர். ஆர்தர் கொனன் டொயல்(Sir Arthur Conan Doyle) அவர்களால் உருவாக்கப் பட்ட துப்பறியும் கற்பனை பாத்திரமே "ஷெர்லாக் ஹோல்ம்ஸ்"."ஷெர்லாக் ஹோல்ம்ஸ்" ஐ வைத்து 4 நாவல்களையும், 56 சிறுகதைகளையும் எழுதியுள்ளார் இதன் ஆசிரியர். என் சிறுவயது ஆக்க்ஷன் ஹீரோஇவர்தான்.

ஷேக்ஸ்பியரின் Twelfth Night:

உலகப்புகழ் பெற்ற ஆங்கில இலக்கிய மேதை, வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதிய "ரொமாண்டிக் காமெடி" கதையே Twelfth Night ஆகும்.
நாயகி வயோலா தன் இரட்டை சகோதரன் செபஸ்டியன் போல வேடமிடுகிறார், அவர் மேல் ஒலிவியா காதல கொள்ள நடைபெறும் குழப்பங்களின் கடைசியில் நாயகன் செபஸ்டியன் வந்து சுபமாக முடியும் நகைச்சுவை காதல் கதை.இதன் கதாபாத்திரங்கள் செபஸ்டியன், வயோலா, ஒலிவியா ஆகியோரின் பாத்திரப்படைப்பு மிகுந்த சுவாரசியமாக இருக்கும்.

தி ஸ்கார்லெட் பிம்பெர்னல் (The Scarlett Pimpernal):

பிரிட்டன் நாவலாசிரியை "பரோனஸ் ஆர்சி", அவர்கள் உருவாக்கிய வீர சாகச
நாவல் இது. பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில்நடைபெறும் இந்த கதையின் நாயகன் , பெர்சி ப்ளாக்னி எனும் கோமாளி செல்வந்தனாகவும், பிரெஞ்சுப் பிரபுக்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் புரட்சிகாரர்களிடம் இருந்து காப்பாற்றும் ஸ்கார்லெட் பிம்பெர்னலாகவும் என்னை மிகவும் கவர்ந்தார். இங்கிலாந்தின் மிகச்சிறந்த அரங்கேற்ற நாடகங்களில் , இதுவும் ஒன்றாகும்.


சிட்னி ஷெல்டன் நாவல்கள்:

இவ்வாறாக வெறும் பாட புத்தக ஆங்கில நூல்களையே இதுவரை வாசித்து ரசித்திருந்த எனக்கு, மிக நீண்ட வருடங்களுக்கு பின் அறிமுகமான முதல் ஆங்கில நாவல், சிட்னி ஷெல்டன் அவர்களின் நாவல்களே,இவர் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர், ஆஸ்கார் விருது பெற்றவர்.த்ரில்லர் நாவல் உலகின் முடிசூடா மன்னனவார்.

எதேச்சையாக இவரின் நாவல் ஒன்று எனக்கு கிடைத்தது, நாவலின் தலைப்பு "Are You Afraid of the Dark", சரி எப்படி தான் இருக்குமோ பார்ப்போம் என்ற நினைப்பில் படிக்க ஆரம்பித்த நான், இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு 300 சொச்சம் பக்கங்களையுடைய அந்த நாவலை தொடர்ச்சியாக படித்து முடித்திருந்தேன். (உணவு , தூக்கம் இன்றி ).முற்றிலும் புதிய , படிக்கும் சுவாரசியத்தையும், வாசிப்பு அனுபவத்தையும் தந்தது அந்த நாவல். 

அதன் பிறகு , சிட்னி ஷெல்டன் நாவல்களை தேடி தேடி வாங்கிப் படித்தேன்.ஒவ்வொரு முறை அவரின் நாவல்களை படிக்கும் போதும் , அந்த கதை மாந்தர்களுடனும் , கதை சூழலுடனும் ஒன்றிப் போய், அதை விட்டு வெளியில் வர குறைந்த பட்சம் 2 நாட்களாவது எனக்கு தேவைப்பட்டது. அந்த அளவிற்கு என்னை ஈர்த்தது அவரின் நாவல்கள். கிட்டத்தட்ட அவரின் அனைத்து நாவல்களையும் படித்து முடித்துவிட்டேன். துரதிஷ்டவசமாக அவரின் 18 புத்தகங்களை , ஒரு பேருந்தில் தொலைத்துவிட்டேன். இன்னும் எனக்கு வருத்தமான விஷயம் அது. அதன் பின்னர் அவரின் அனைத்து நாவல்களும் மின்-நூல்களாக எனக்கு கிடைத்த பின்பு தான் எனக்கு ஆறுதலே கிடைத்தது.

எனக்கு மிகவும் பிடித்த அவரின் நாவல்கள் சில


டான் பிரவுன் (Dan Brown) நாவல்கள் :

"தி டாவின்சி கோட்" எனும் சர்ச்சைக்குரிய நாவலின் மூலம் உலகப் புகழ் பெற்றவர் டேன் பிரவுன்.இவர் எழுதிய 5 நாவல்களும் சிறந்த த்ரில்லர் கதைகளாகும். 

சேட்டன் பகத் நாவல்கள்:

இவ்வாறு சிட்னி ஷெல்டன் , டேன் பிரவுன் என வேறு நாட்டு நாவலாசிரியர்களின் படைப்புகள் மட்டுமே எனக்கு தெரிந்திருந்த நிலையில் , நண்பர்ஒருவர் அறையில் கிடைத்த இந்திய நாவலாசிரியர் ஒருவரின் புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது. அவர் "சேட்டன் பகத்", அந்த நாவலின் பெயர் "One Night @ the Call Center". மிக வித்தியாசமான கதைக் களத்தில் , இந்தியப் பின்னணியில் அமைந்திருந்த அந்த கதை எனக்கு உடனடியாகபிடித்துபோனது. பின்னர் அவர் நாவல்களை தேடி படித்தேன்.


இந்த நாவல்கள் அனைத்தும் இளம்தலைமுறையினர் ரசிக்கும் விதமாக இருந்தது. இவரின் "Five Point Someone" நாவல் "3Idiots" திரைப்படமாக வந்து அனைவரின் பாராட்டையும் வசூல் சாதனையையும் படைத்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவின் "The NewYork Times" இந்திய வரலாற்றில் அதிகம் விற்பனையாகும் நாவல்கள், இவருடயதே என்று கூறுகிறது. இவரின் சமீபத்திய படைப்பான "Revolution 2020: Love,Corruption,Ambition" எனும் நூலை மட்டும் இன்னும் வாசிக்கவில்லை.




நண்பர்களே,வரும்காலத்தில் இன்னும் நிறைய இந்திய, வேற்று நாட்டு நாவலாசிரியர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவாலாக உள்ளது. நீங்கள் ரசித்த நாவல்/நாவலாசிரியர் பெயர்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். நன்றி.















1 Comments
Tweets
Comments

Popular Posts