இன்று ஓசூரில், நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தினர் இணைத்து வழங்கிய,"வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு " என்னும் தலைப்பிலான முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
தமிழக சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களுக்கு, மியூச்சுவல் பண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாணயம் விகடன், சிரத்தை எடுத்து தமிழகத்தின் பல ஊர்களில் இது போன்ற நிகழ்சிகளின் மூலமாக சிறந்த சேவை ஆற்றி வருவது மிகவும் பாராட்டத்தக்கது. முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள sms மூலம் பதிவு செய்தவர்களுக்கு பதிவெண் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள வந்த அனைவருக்கும் ICICI மியூச்சுவல் பண்ட் சார்பில் பேனா, நோட்பேட், மியூச்சுவல் பண்ட் பற்றிய கையேட்டு புத்தகம் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்கள். நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கியது. சுமார் 250 பேர் வரை இதில் கலந்து கொண்டனர். ஓசூர் மட்டுமின்றி , பெங்களூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி என பல ஊர்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தது.
மியூச்சுவல் பண்ட் நிபுணர் திரு சொக்கலிங்கம் பழனியப்பன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் 'Product Specialist' திரு பாலாஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
சேமிப்பு பற்றிய அடிப்படைகளையும், முதலீட்டின் அவசியத்தையும், வெவேறு முதலீட்டு வழிமுறைகள் , அதில் equity சார்ந்த முதலீடு எவ்வாறு அவசியம் என்பது குறித்து பல்வேறு statistics மூலம் விவரமாக எடுத்துரைத்தார் திரு பாலாஜி. பின்னர் திரு சொக்கலிங்கம் அவர்கள் சேமிப்பின் பின்னாலுள்ள மக்களின் மனநிலையை பற்றி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பல கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.
நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள். இது போல இன்னும் பல நிகழ்சிகளை தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நீங்கள் நடத்த வேண்டும், இதன் மூலம் மக்கள் சரியான வழியில், தங்கள் முதலீடுகளை செய்ய முடியும்.
(வெறும் 3 மணி நேரத்தில், சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து போதிய விழிப்புணர்வு கொடுக்க முடியாதிருந்த போதிலும் , இந்த முயற்சி வரவேற்க்கத்தக்கது. ஆனால் சாதாரண, நடுத்தர குடும்ப மக்களே பங்கேற்ற இந்த நிகழ்வில் பெரும்பாலும், ஆங்கிலத்திலும் முதலீடுகள் குறித்த Technical Terms இல் மட்டுமே விளக்கம் அளித்தனர். இதனால் மியூச்சுவல் பண்ட் குறித்து ஏற்கனவே அறிந்திராதவர்களுக்கு சற்று கடினமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. எதிர்வரும் நிகழ்வுகளில் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நாணயம் விகடன்-ஐ அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)